மதுரை: 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தகுதிநீக்கப்பட்ட 18 பேருக்கும், உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும். சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி சத்தியநாராயணன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். அதேபோல் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கி 3வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து 18 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம் அனுப்பியது. அதேபோல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு நகலை அனுப்பியது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தினால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக செலவிடப்படும்.
எனவே 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது மேற்கண்ட 18 தொகுதிகளுக்கு செலவிடப்பட்ட தொகையை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் வசூலிக்க வேண்டும். அந்த தொகையை கஜா புயல் பாதித்த பகுதிகளில் செலவிட உத்தரவிட வேண்டும். அதுவரை 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை. இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என்றும், இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தகுதிநீக்கப்பட்ட 18 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது