கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த வரப்பாளையத்தில் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட அமமுக பிரமுகரின் உடல் பாகங்களை 86 நாள்களுக்குப் பின்னர் போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் நகர அமமுக தலைவராக இருந்தவர் ஜெயவேணு. இவருக்கு பாலதீபா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். ஜெயவேணு செப்டம்பர் 30-இல் கோவையில் நடந்த ஒரு வழக்கில் சாட்சி கூறுவதற்காக வந்திருந்தார். பின்பு அவரைக் காணவில்லை. இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் பாலதீபா புகார் அளித்திருந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் துடியலூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவரும் ஜெயவேணுவும் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயவேணுவை சுத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டதாகவும், உடலை வரப்பாளையத்தில் உள்ள பாழுங் கிணற்றில் வீசிவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து உடலை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். கிணறு ஆழமாக இருந்ததாலும், குப்பைகளைப் போட்டு நிறைத்து வைத்திருந்ததாலும் அதைத் தோண்டுவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதையடுத்து இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மீட்புப் பணி நடந்தது.
அப்போது குப்பைகளுக்குள் மனித எலும்புகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில் அது ஜெயவேணுவின் எலும்புகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கோவை வடக்கு வட்டாட்சியர் சிவகுமார், அரசு பொது மருத்துவமனை சட்டம் சார்ந்த மருத்துவத் துறையின் மருத்துவர் ஜெய் சிங் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து ஜெயவேணுவின் உடற்பாகங்களை பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த பாகங்கள் தொடர் ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இந்தப் பணியின்போது பெ.நா.பாளையம் காவல் கண்காணிப்பாளர் மணி, துடியலூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







