சென்னை: நீட் தேர்வு விவகாரத்தினால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் படத்தினைக் கூட பேரணியில் வைக்க அனுமதிக்காத அநியாய அரசு இது என்று இயக்குநர் பாரதிராஜா ஆவேசமாகக் கூறினார்.
இன்று உலக தாய்மொழி தினம். அதனை ஒட்டி 'தமிழ் கல்வி இயக்கம்' என்னும் அமைப்பின் சார்பாக மைலாப்பூரில் அமைதிப் பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணி முடிவில் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நம்முடைய வளர்ச்சியில் நமது தாய்மொழியின் வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது. அதனை அனைவரும் உணர வேண்டும்.
இந்த அமைதிப் பேரணியில் நீட் தேர்வு விவகாரத்தினால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் படத்தினை வைக்க விரும்பினோம். ஆனால் இந்த அநியாய அரசு அதற்கு கூட அனுமதி தரவில்லை.
நீங்கள் படத்தினை தடுக்கலாம். ஆனால் அனிதாவின் பெயரை எங்கள் வாய் உச்சரிப்பதற்கு ஏதேனும் பூட்டுப் போட முடியுமா?
இவ்வாறு அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.