அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்
Updated on
2 min read

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கும் போது ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா இருசக்கர வாகனத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தைத் தேர்வு செய்யலாம். மேலும், வாகனத்தைப் பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம். 125 சி.சி. திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.
பணிபுரியும் மகளிர்: இருசக்கர வாகனத் திட்டமானது, பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாகத் தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத் திட்டங்களில் பணியாற்றுவோர், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இந்தத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனங்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.
வயது என்ன?: இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது ஆண்டு வருமான அளவு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது. மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப் பகுதிகள், கைவிடப்பட்ட, கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், 35 வயதைத் தாண்டிய திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. அவற்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். 
சென்னை போன்ற மிகப்பெரிய மாநகராட்சிகள், நகராட்சிகளில் விண்ணப்பங்களை விநியோகிக்கக் கூடுதலாக கவுன்ட்டர்கள் திறக்கப்படும். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்படும்.
விண்ணப்பங்களை வரும் 22-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப். 5 கடைசி நாளாகும். மாவட்ட அளவிலான கள ஆய்வுப் பணிகள் பிப்.15-க்குள் முடிக்கப்படும்.
தேர்வு செய்யக் குழு:பயனாளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட அளவில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, கிராப்புறம் மற்றும் நகர்ப்புறம் என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்களுக்கும் மாவட்ட ஆட்சியரே தலைவராக இருப்பார்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் பயனாளிகளைத் தேர்வு செய்ய தனியாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை மாநகராட்சி ஆணையாளர் தலைவராக இருப்பார். துணை ஆணையாளர் (கல்வி) உறுப்பினர் செயலாளராகச் செயல்படுவார். வாகனத்துக்கான மானியமானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும் என்று வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன ஆவணங்கள்?: இருசக்கர வாகனத்துக்கான மானியம் பெறுவோர், சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதன்படி, வயதுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று), ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்றிதழ் (வேலை அளிப்பவரிடம் இருந்து பெற வேண்டும்), வேலையின் தன்மை குறித்த சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விக்கான சான்றிதழ் (எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்), கடவுச் சீட்டு அளவு புகைப்படம், ஜாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பினராக இருந்தால்) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com