

கோவை - பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை - பொள்ளாச்சி இடையே சாதாரணப் பேருந்துகளில் ரூ.17 ஆகவும், விரைவுப் பேருந்துகளில் ரூ.23 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ரூ.25, ரூ.33 ஆகவும் உயர்த்தப்பட்டது.
இந்த வழித் தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகளில் கடந்த 12ஆம் தேதி முதல் அறிவிக்கப்படாத கட்டண உயர்வாக அனைத்து பேருந்துகளிலும் ரூ.3 கூடுதலாக வசூலிக்கப்பட்டது. உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் புட்டுவிக்கி பாலம் வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிச் சென்றன. அதேபோல், பொள்ளாச்சியில் இருந்து கோவை வரும் பேருந்துகள் நஞ்சுண்டாபுரம் வழியாக சுமார் 9.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றி வருகின்றன.
தற்போது, புட்டுவிக்கி சாலை மோசமடைந்திருப்பதால் பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் குனியமுத்தூர், கோவைபுதூர் வழியாக சுற்றிச் செல்கின்றன. இதையடுத்து பேருந்துக் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சியில் இருந்து கோவை உக்கடம் வரை செல்லும் அரசின் சாதாரணப் பேருந்துகளில் ரூ.28 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.32 ஆகவும், விரைவுப் பேருந்துகளில் ரூ.36 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்கண்ட பேருந்துகளில் கோவை வரும் ஒவ்வொரு பயணிக்கும் இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, பொள்ளாச்சி - ஆத்துப்பாலம் வரையிலும் பயணிப்பதற்கு முறையே ரூ.25, ரூ.33 ஆக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதே பயணிகள் உக்கடம் பேருந்து நிலையம் வரை வர வேண்டும் என்றால் அவர்களிடம் ஆத்துப்பாலம் - உக்கடம் இடையே செல்ல ரூ.7-க்கு இரண்டாவதாக ஒரு டிக்கெட்டும் வழங்கப்படுகின்றன.
பேருந்துகள் கூடுதலாக 10 கிலோ மீட்டர் தொலைவைச் சுற்றிச் செல்வதால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.75 பைசா வீதம் கூடுதல் கட்டண வசூலிப்பு அமல்படுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.