

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் இத்தனை பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற இலக்கு உள்ளதா என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெண்ணின் சார்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மதுரை கிளை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மூதாட்டியைக் கொலை செய்தக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கலாதேவி மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது.
ஒரே ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த நீதிபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் இத்தனை பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்று காவல்துறையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார் நீதிபதி.
மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள பெண் எத்தனை குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று தேனி எஸ்பி பாஸ்கரனுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மூதாட்டியை கொன்றதைத் தவிர அவர் மீது எந்த வழக்கும் இல்லை என்று பாஸ்கரன் பதில் அளித்தார். மேலும், கலாதேவி மீதான குண்டர் தடுப்புச் சட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் எஸ்பி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் கோரி கலா தேவி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.