108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்கவில்லை, பெண் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள், 8 மணி நேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இவர்கள், ஏற்கனவே மே 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் ஜூன் 8-ஆம் தேதி முதல் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், 108 சேவையை நடத்தி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனப் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடன் தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் வியாழக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நேற்று காலையில் தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இந்தப் மும்முர பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதை அடுத்து
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.