

சென்னை: தங்களது உடல்நிலை குறித்த அறிக்கையினை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யுமாறு வேட்பாளர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துளார்.
தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்பொழுது வேட்பாளர்கள் தங்களது உடல்நிலை குறித்த அறிக்கையினை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு, பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக அரசு இருவரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு விரிவாக பதிலளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த மனுவானது திங்களன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சார்பில் அவரது வழக்கறிஞர் பதில்மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வேட்பாளரின் உடல்நலம் என்பது அவரது அந்தரங்க விவகாரமாகும். எனவே அது தொடர்பான விபரங்களை மருத்துவ அறிக்கையாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
இவ்வாறு அந்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.