சென்னை: சட்ட பல்கலைக்கழகத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் தவறு இருந்தால் தாராளமாக என் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகனான விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். இவர் தமிழக சட்டப் பல்கலைகழகத்தில் முன்னாள் துணைவேந்தர் வணங்கமுடியின் பதவிக்காலத்தில், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, என்.ஆர்.ஐ கோட்டா மூலம் மூன்று ஆண்டுகள் கொண்ட எல்.எல்.பி படிப்பில் சேர்ந்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குற்றச்சாட்டில் என் மீது தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுங்கள் என்று விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
என்னுடைய சகோதரி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அதனைப் பயன்படுத்தி நான் என்.ஆர்.ஐ கோட்டாவில் சேர்ந்தேன். சேர்க்கையின் பொழுது அதற்குரிய ஆவணங்களை முறையாக சமப்பித்துள்ளேன். அவ்வாறு நான் சமப்பிக்கவில்லை என்றால் எனக்கு இடம் வழங்கப்பட்டிருக்காது.
படிப்பில் சேர்ந்த பிறகு எனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. மற்றும் சில காரணங்களால் என்னால் படிப்பினைத் தொடர இயலவில்லை. நான் உரிய ஆவணங்களை பல்கலையில் அளித்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளேன். குற்றச்சாட்டில் என் மீது தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுங்கள்
ஆனால் இது தொடர்பாக தவறான தகவல்கள் பரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.