காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கால அவகாசம் கோரியுள்ள மத்திய அரசின் மனுவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கால அவகாசம் கோரியுள்ள மத்திய அரசின் மனுவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசின் இந்த மனுவை விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.