டெங்கு - பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு
டெங்கு - பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?
Updated on
3 min read


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தீவிரமாக உள்ளது. இந்த காய்ச்சல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலின் தீவிரத்தால் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்கும்படி தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி கூறியதாவது: 

டெங்கு காய்ச்சல் இது டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சலாகும்.

எப்படி பரவுகிறது? 
நல்ல நீரில் உருவாகும் ஏடிஎஸ் கொசுக்கள் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஎஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு பரவுகிறது. 

கொசு உற்பத்தியாகும் இடம்: டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்கா ஓடுகள், திறந்த கிணறு, தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், தட்டுகள் மற்றும் அவைகளில் தேங்கியிருக்கும் நல்ல நீரில் 'ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. 

ஏடிஎஸ் கொசு எவ்வளவு காலம் உயிரி வாழும்? 
ஏடிஎஸ் கொசு மூன்று வாரம் உயிர் வாழும். இங்கு மூன்று வார காலத்தில் ஒரு கொசு நல்ல நீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. ஏடிஎஸ் கொசு பகலில் மனிதர்களை கடிக்கும் தன்மையுடையது. உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை 'புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.

ஏடிஎஸ் கொசுவின் வளர்ச்சியை எவ்வாறு தடுக்கலாம்?
ஏடிஎஸ் கொசுக்கள் நல்ல நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இவை முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறி பத்து நாள்களில் கொசுக்களாக உற்பத்தியாகின்றன. ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து வீடுகள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முடியும். தமிழகத்தில் எலிசா (ELISA) பரிசோதனை முறையில் டெங்குக் காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

காய்ச்சலின் அறிகுறிகள்: காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டணுக்களை அழித்துவிடும் தன்மை உடையது. ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர் பாதையில் ரத்த கசிவு ஏற்படும்.

கவனிக்க வேண்டியவை: டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருத்துவ சிகிச்சைப்பெற வேண்டும். தாமாகவே கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்கி உட்கொண்டாலோ, போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும். 

எவ்வாறு குணப்படுத்தலாம்?: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், முறையான கவனிப்பும் கொடுத்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம். டெங்கு காய்ச்சால் உடலில் நீர்ச்சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டும் உயிர்காக்கும் ஓஆர்எஸ் கரைசல் போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும். காய்ச்சல் நின்ற பின்னர் மூன்று நாள்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்க வில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

டெங்கு வராமல் தடுக்க..: டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கல் உருவாகும் இடங்களை அழிக்க வேண்டும். வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொணடால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.

பன்றிக்காய்ச்சல்: பன்றிக்காய்ச்சல் 1920 - 1930 ஆண் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடையே இந்த காய்ச்சல் பரவி வந்த து. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின்னர் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவி வருகிறது. தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவுவதில்லை. ஏஎச்1என்1 இன்ஃப்ளூயன்சா வைரஸ் கிருமிகளால் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. 

அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? 
சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு இந்த அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு ஏற்படலாம். 

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதோ, தும்மும்போதோ வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்த கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை நாம் தொடும்போது, நம்முடைய கைகளில் கிருமி ஒட்டிக்கொள்கிறது. அதன் பின் நாம் கைகளை கழுவாமல் கண்ககள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது நமக்கு கிருமி தொற்று ஏற்படுகிறது.

வராமல் தடுப்பது எப்படி? 
வீட்டில் இருந்து பள்ளி, அலுவலகம் சென்றவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பியவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் மிகவும் நல்லது. கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். 

மாத்திரை, மருந்துகள் என்னை? 
பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரை உள்ளது. டாக்டர்களின் ஆலோசனைப்படி டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் காய்ச்சல் குணமாகிவிடும். 

காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? 
காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோசனை பெற்று முறையான  சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாமாகவே கடைகளுக்கு சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது. பள்ளி, அலுவலகம் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இருமும் போதும், தும்மும்போதும் வாய் மற்றும் கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும். பயன்படுத்திய கைக்குட்டை மற்றும் இதர துணிகளை நன்கு துவைத்து வெளியில் காய வைத்து பயன்படுத்த வேண்டும். 

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக சிறப்பு காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனிடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com