/

நாகப்பட்டினம்: நண்பன் பட பாணியில் மின்சாரம் இல்லாத மருத்துவமனையில் பிரசவித்த பெண்

கஜா புயல் பலரது வாழ்க்கையையும் சூறையாடிச் சென்றிருக்கும் நிலையில், நாகப்பட்டினத்தில் புயல் பாதிப்பின் போது மின்சாரம் இல்லாத மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார் ஒரு பெண்.

News image
Updated On :22 நவம்பர் 2018, 11:10 am

K Ezhilarasan


கஜா புயல் பலரது வாழ்க்கையையும் சூறையாடிச் சென்றிருக்கும் நிலையில், நாகப்பட்டினத்தில் புயல் பாதிப்பின் போது மின்சாரம் இல்லாத மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார் ஒரு பெண்.

விஜய் நடித்த நண்பன் படத்தில் ஒரு காட்சி இதுபோல அமைக்கப்பட்டிருக்கும். அது படம். ஆனால் இங்கே நடந்திருப்பது நிஜம்.

நாகப்பட்டினத்தில் தெற்களத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் டி. ரமேஷ். இவரது மனைவி மஞ்சுளா (21). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கஜா புயல்  அறிவிப்பு வெளியானது.

பிரசவ நேரமும், கஜா புயல் கரையைக் கடக்கும் நாளும் ஒன்றாக இருந்ததால் அதிர்ந்து போனார்.  கஜா புயலுக்கு பயந்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கஜா புயல் தாக்கும் முன்பே மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருளில் இரவு முழுவதும் தம்பதியர் அச்சத்தோடு காத்திருந்தனர். மறுநாள் கஜா கரையைக் கடந்து மருத்துவமனையைச் சுற்றிலும் மரங்கள் சூறையாடப்பட்டு இருந்தன.

வலி ஏற்பட்டு பிரசவ அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் மஞ்சுளா. மின்சாரமும் இல்லை. வெளிச்சமும் இல்லை. மருத்துவர் ராமமூர்த்தி, செவிலியர் சுந்தரி உதவியோடு, செல்போன் டார்ச் மூலம் மஞ்சுளாவுக்கு பிரசவம் பார்த்தார். நல்ல வேளையாக சுகப்பிரசவம் ஆனது. தாயும் குழந்தையும் வார்டுக்கு மாற்றப்பட்டனர். 

கஜா புயலை யார் மறந்தாலும், மஞ்சுளா - ரமேஷ் தம்பதியரால் மறக்கவே முடியாத அளவுக்கு மிகப்பெரிய அனுபவத்தை தந்துள்ளது எனலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.