கஜா புயல் : கொடைக்கானல் மேல்மலையில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதம்: மண் திட்டுகளை சீரமைக்க நிவாரணம் வழங்க கோரிக்கை
கஜா புயலால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மண் திட்டுகள் (டெரேஸ் பார்மிங்) சேதமடைந்துள்ளன. இதனால் மலைப் பயிர்களான கேரட், பூண்டு, பீன்ஸ், உருளை உள்ளிட்ட காய்கறிகளின் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் கேரட், பூண்டு, பீன்ஸ், உருளை போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப் பயிர்களில் தண்ணீர் தேங்கி இருக்கக் கூடாது என்பதற்காக படிக்கட்டு போன்ற வடிவில் மண் திட்டுகள் அமைத்து சாகுபடி செய்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தால், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மண் திட்டுகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த காய்கறிப் பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அதேபோல், பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டு மண் திட்டுகள் சேதமடைந்துள்ளன. ஒரு ஏக்கரில் இதுபோன்ற மண் திட்டுகளை ஏற்படுத்துவதற்கு சுமார் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் செலவாகும் என விவசாயிகள் கூறுகின்றனர். கஜா புயலினால், மலைப் பயிர்களின் மகசூல் பாதிப்பு மட்டுமின்றி, மண் திட்டுகளும் சேதமடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பயிர் இழப்புகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. பயிர் இழப்புகளோடு, மண் திட்டு சரிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பூம்பாறை பகுதியைச் சேர்ந்த ஜி. ராஜூ கூறியது:
கேரட், பூண்டு, பட்டானி பயிர்கள் பூம்பாறை பகுதியில் சேதமடைந்துள்ளன. பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகள் விடுபட்டாலும், நில சீரமைப்பு பணி கடும் சவால் அளிப்பதாக உள்ளது. ஒரே நேரத்தில் 20 தொழிலாளர்கள் வரை பணியாற்றினால் மட்டுமே மீண்டும் திட்டுக்களை உருவாக்க முடியும். விளை பொருள்களை அறுவடை செய்வதற்கு பெரும் சிரமம் அடைந்து வந்த நிலையில் இதுபோன்ற சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது எளிதல்ல. எனவே, நில சீரமைப்பு பணிகளுக்கும் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
பாரதிய கிசான் சங்க மாநில செயலர் வி.அசோகன் கூறியது: மண் திட்டுகளை சீரமைக்கும் பணிக்கான செலவு, அந்தந்த நில அமைப்புகளுக்கு ஏற்ப ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 30ஆயிரம் முதல் ரூ.1லட்சம் வரை தேவைப்படும். பயிர் இழப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதைபோல், நில மறு சீரமைப்பு செய்வதற்கும் நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே இழப்புகளிலிருந்து விவசாயிகளால் மீள முடியும் என்றார்.
கூடுதல் கால அவகாசம் தேவை
கஜா புயலால் விளை நிலங்களில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை, கெய்சாலா செயலி மூலம் அட்சரேகை, தீர்க்க ரேகை விவரங்களோடு இம் மாதம் 26ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைப் பகுதியில் ஒரு அலுவலரால் அதிகபட்சம் 20 விவசாயிகளுக்கு மட்டுமே சேத விவரங்களை பதிவேற்றம் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
