புது தில்லி: தமிழகத்தில் கஜா பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுக்க மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வருட நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தை கடந்த 16ந்தேதி தாக்கிய கஜா புயலினால் டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.
எனவே இங்குள்ள மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கஜா பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நவம்பர் 30-ஆம் தேதியாக இருந்த கடைசித் தேதி தற்போது டிசம்பர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.