மதுரை மாவட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் குறித்த பட்டியல் அரசு உத்தரவாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டாண்டு காலமாக தை பொங்கலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறுவது வாடிக்கை. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளைகள் வதைக்கப்படுவதாகக் கூறி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி பீட்டா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரீனா கடற்கரையில், மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தின. அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதற்கான சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சில கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான உத்தரவை கால்நடை பாதுகாப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால் அண்மையில் வெளியிட்டார். அதற்கான அராணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் 2017-ன் அடிப்படையில், குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 15-ஆம் தேதியன்றும்; வாடிப்பட்டி தாலுகாவில்
உள்ள பாலமேட்டில் ஜனவரி 16-ஆம் தேதியன்றும்; அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்றுஅந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.