புது தில்லி: தமிழகத்தை பெரும் பாதிப்புக்குளாக்கிய கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை கடந்த நவம்பர் மாதம் தாக்கிய கஜா புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களில் கடும் பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்பட்டது.
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் இடைக்கால நிவாரணமாக ரூ.15000 கோடி கேட்டு, தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி நேரில் தில்லி சென்று கோரிக்கை வைத்தார்.
பின்னர் மத்திய அரசின் சார்பாக ஆய்வுக் குழுவினர் தமிழகம் வந்து பாதிப்புகளை பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதனிடையே தமிழக அரசின் தரப்பில் இருந்து முதல்கட்டமாக ரூ.1000 கோடியை விடுவித்து முதல்வர் உத்தரவிட்டார்., அத்துடன பல்வேறு வகையான நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தை பெரும் பாதிப்புக்குளாக்கிய கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் திங்கள் கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த உயர் மட்டக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் கட்டமாக ரூ.1146 கோடியே 12 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளதாகத் தெரிகிறது.