அதிமுகவை வலிமை வாய்ந்த கட்சியாக வலுப்படுத்த மாவட்ட அளவில் புதிதாக 3 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் வலியுறுத்தினார்.
தாம்பரத்தில் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம்.சி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவை, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் பேசியது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவை தமிழ்நாட்டில் வலிமைவாய்ந்த கட்சியாக உயர்த்தி, அசைக்க முடியாத சக்தியாக திகழ வைத்தார். அவர் விட்டு சென்ற பணிகளை அவரது வழியில் பின்பற்றி, சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றிட நாம் அனைவரும் ஒற்றுமையோடு உழைத்து பெருமை சேர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அதிமுகவில் தற்போதுள்ள ஒன்றரை கோடி உறுப்பினர்களை நாம் இரண்டரை கோடியாக உயர்த்தி கட்சியை வலுப்படுத்த வேண்டும். காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நாம் ஒற்றுமையுடன் இருந்து சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட அவைத் தலைவர் தனபால், மீனவர் அணி செயலாளர் எம்.சி.முனுசாமி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஜி.எம்.சாந்தகுமார், பரங்கிமலை ஒன்றிய செயலாளர் என்.சி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.