உமறுப்புலவர் பிறந்த தினம் இனி அரசு சார்பில் மாவட்ட அளவில் கொண்டாடப்படும் என அறிவித்ததற்காக அவரது வாரிசுதாரர்கள் தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைந்துள்ள உமறுப்புலவர் மணிமண்டபத்தில், அவரது பிறந்த நாளான அக்டோபர் 23-ஆம் தேதியன்று மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உமறுப்புலவர் வாரிசுகளும் இலக்கிய அறக்கட்டளையின் தலைவர் எச்.ருமைசுதீன் ஃபைஸி, செயலாளர் மு.உமர்கத்தாபு, இணைச் செயலாளர் மோ.பாட்டழகன், கௌரவ ஆலோசகர் கே.பீர் முகம்மது, உமறுப்புலவர் சங்கத்தின் தலைவர் உ.காஜாமைதீன் உள்ளிட்டோர் முதல்வர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.