டோக்கியோ: 2 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரமதர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு நாளை, நாளை மறுநாள் என இருநாட்கள் டோக்கியோவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தில்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.
ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு டோக்கியோ நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 13-வது முறையாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், பிரதமர் மோடி 5-வது முறையாக கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டின் போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்திக்க உள்ளார் மோடி.
இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு உறவு, ஆசிய பிராந்திய விவகாரம், சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார்.
28-ஆம் தேதி அன்று பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் டோக்கியோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் பியூஜி மலைச்சாரலில் உள்ள பண்ணை வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு மோடிக்கு, ஷின்சோ அபேவும், அவரது குடும்பத்தினரும் தனி விருந்து அளித்து கவுரவிக்கிறார்கள்.
ஷின்சோ அபே தமது வீட்டில் வேறு எந்த நாட்டு தலைவருக்கும் தமது வீட்டில் தனி விருந்து அளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.