சென்னை: கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யும் திட்டத்தின்படி மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மையம் அக்டோபர் முதல் செயல்பட உள்ளது.
இது குறித்து சுற்றுலாத் துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் முதல் களங்கரை விளக்கம் வரையில் 4 இடங்களில் சுத்தமான குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச முதல்உதவி மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து அக்டோபர் மாதம் முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அடுத்தகட்டமாக எல்லியட்ஸ் கடற்கரையிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் சென்னையின் மிக முக்கிய கடற்கரைப் பகுதிகளான மெரினா மற்றும் எல்லியட்ஸ் கடற்கரைகளில் இ-கழிப்பறை வசதி, தகவல் மையங்கள், கண்காணிப்புக் கோபுரங்கள், கடற்கரையைப் பார்த்தபடி அமரும் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.