சென்னை: சசிகலாவின் ஆலோசனைப்படியே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம் என்று அமமுகவின் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வியாழனன்று முடிவடைந்த நிலையில் அமமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை அசோக்நகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்தில் அமமுகவின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை பொதுச்செயலாளராக கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர்.
அதேநேரம் அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்வதற்கான பணிகளை விரைந்து துவக்க தினகரன் முடிவு செய்து, அதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலாவின் ஆலோசனைப்படியே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம் என்று அமமுகவின் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
சசிகலாவின் ஆலோசனையுடன்தான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலராக அவர் தேர்வு செய்யப்பட்டது பற்றிய வழக்கு விசாரணையில் இருக்கிறது. எனவே அதுகுறித்த முடிவு தெரியும் வரை இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் அவர் அமமுகவின் தலைவராக இருப்பார்;
அமமுகவின் துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்வு விரைவில் நடைபெறும்
விரைவில்நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.