சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆதாரங்களோடு சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்திருந்தார். அதோடு, மூன்று பேரும் அமமுகவில் பதவி வகிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்களாக இருந்து கொண்டு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்து விளக்கம் கேட்டு அவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான ஆலந்தூர் பாரதி தலைமையிலான குழுவினர் செவ்வாயன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைச் செயலரை நேரில் சந்தித்து நமபிக்கையில்லாத் தீர்மான த்திற்கான கடிதம் கொடுத்தனர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் சபாநாயகர் தனபாலின் செயல்பாடு பாரபட்சமாகவும், ஜனநாயகத்தை படுகொலை செய்வதாக உள்ளது என்றும் திமுக தரப்பு தெரிவித்துள்ளது.
விதிப்படி நோட்டீஸின் பிரதி சபாநாயகருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.