ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையை ரஜினிகாந்த் வரவேற்றிருப்பது அவரது தேசப்பற்றைக் காட்டுகிறது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மிகச்சரியானது என்று தெரிவித்தார். இதையே பல தலைவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெருவாரியான தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
இதனை பார்க்கும் போது தேசப்பற்று மிக்க பலர் தெரிவித்ததைப் போன்று ரஜினிகாந்தும் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டுவது, நெற்றியில் பொட்டு வைப்பது கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்துவிரோத செயல் என்பதால் உடனடியாக இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெற வேண்டும். மேலும் சுற்றறிக்கை அனுப்பிய ஆணையர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.