தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும் அதிநவீன இயந்திரங்களைக் கொண்ட ஐந்து வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலக வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 1,198 ஹெக்டேர் பரப்பில் சுமார் 5 லட்சத்து 35 ஆயிரத்து 273 மெட்ரிக் டன் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தக்காளி அதிகமாக விளையும் பருவங்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, குறைந்த விலையில் விற்கக் கூடிய நிலை ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்ட நிதியின் கீழ், ரூ.2 கோடி மதிப்பில் தக்காளியைப் பதப்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகத் தயாரிக்கும் இயந்திரங்களைக் கொண்ட வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தால் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
பண்ணைக்குச் செல்லும் வாகனங்கள்: மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்கும் இயந்திரங்களைக் கொண்ட வாகனங்கள், நேரடியாக விவசாயிகளின் பண்ணைக்கே எடுத்துச் செல்லப்படும். தக்காளி மட்டுமின்றி பப்பாளி, கொய்யா, திராட்சை, மாம்பழம் பழங்களையும் பதப்படுத்தி அதன் சாறுகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில்,மூன்று வாகனங்கள் கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், தருமபுரி மாவட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு குத்தகை அடிப்படையில் அனுப்பப்படும்.
ஒரு வாகனம் தஞ்சாவூர் டெல்டா பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும், தமிழகத்தின் பிறமாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒரு வாகனம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கும் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண் அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தோட்டக் கலைத் துறை இயக்குநர் சுப்பையன், உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் சி.அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.