திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேனும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 15 பேர் வேன் ஒன்றில் ஐயப்ப கோயில் வழிபாட்டுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த வழியில், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் திரும்பிக்கொண்டிருந்த பொழுது, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் பக்தர்கள் வந்த வேன் மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குளானது.
இந்த கோர விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. காயமடைந்த 6 பேர் திருமயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், மீட்பு குழுவினர் தேவையான உதவிகளை அளித்தும், விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும் சரிசெய்தனர்.
விபத்து குறித்து திருமயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.