சென்னை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்கள் அறிவொளி மற்றும் லதா மீது வழக்குத் தொடர லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் இயக்குநராக க.அறிவொளி உள்ளார். இந்த நிறுவனத்தின் சார்பில் உலகமெல்லாம் தமிழ் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு பெரும் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், இத் திட்டத்தில் பெருமளவில் பண முறைகேடு நடைபெற்றிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். விசாரணையில்,அத் திட்டத்தில் பண முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், டிபிஐ வளாகத்தில் உள்ள அறிவொளியின் அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள அவரது வீடு ஆகியவற்றில் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர். காலை 10 மணியளவில் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில், வழக்குத் தொடர்பான பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸார் விரைவில் அறிவொளியிடமும், முறைகேட்டில் தொடர்புடைய ஊழியர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்கள் அறிவொளி மற்றும் லதா மீது வழக்குத் தொடர லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதர இயக்குநர்களான ராமேசுவர முருகன் மற்றும் கருப்புசாமி மீதும் லஞ்ச புகார்கள் எழுந்ததன் எதிரொலியாகவும், சோதனையில் சிக்கிய ஆதாரங்களை வைத்தும் நான்கு இயக்குநர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை அனுமதி கேட்டது.
முதற்கட்டமாக, அறிவொளி, லதா மீது வழக்கு தொடர அரசு தற்போது அனுமதியளித்துள்ளது. லஞ்சமாக பெற்ற பணத்தில் ராமேசுவர முருகன் நகைக்கடை ஒன்றை நடத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைய டுத்து அவரது நகைக்கடையிலும் அதிகாரிகள் விரைவில் சோதனை நடத்த உள்ளதாக தகவல வெளியாகியுள்ளது.