சேலம் சட்டக் கல்லூரிக்கு நடப்பு கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணமாக ரூ.65 ஆயிரம் நிர்ணயம் செய்த கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் முதல்வர் பேகம் பாத்திமா தாக்கல் செய்த மனுவில், சேலம் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைக் கொண்டு, கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் உள்ளிட்ட செலவினங்களை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த நிலையில் 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் கல்விக் கட்டணமாக ரூ.65 ஆயிரம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சுயநிதி சட்டக் கல்லூரி கல்விக் கட்டண நிர்ணயக்குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த கட்டணம் மிக குறைவானதாகும். எனவே கல்விக்கட்டண நிர்ணயக் குழுவின் இந்த கட்டண நிர்ணயத்தை ரத்து செய்ய வேண்டும். கல்விக்கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 3 ஆயிரமாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, இந்த மனுவுக்கு 4 வார காலத்துக்குள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் சிறப்பு அதிகாரி பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.