சென்னை: வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான விவரங்களை அறிய இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ளதை முன்னிட்டு, அது தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு சிறப்பு முகாம்கள் நடத்தி வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் 10 லட்சத்துக்கு 14 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக விண்ணப்பித்து பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாமில் விண்ணப்பம் அளித்தவர்களும், பெயர் சேர்த்தல், நீக்கம், மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்தவர்களும் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஒருவேளை வாக்காளர் பட்டியலில் இன்னமும் பெயர் சேர்க்கப்படவில்லை என்றாலும் கூட, பெயர் சேர்க்க இன்னமும் காலஅவகாசம் உள்ளது. எனவே புதிதாக விண்ணப்பித்து பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.