சென்னை: தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது.அத்துடன் சரிபாதி தொகுதிகளில் அக்கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் இந்த செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
அதேசமயம் மனநல மருத்துவரான ஷாலினி தனது முக நூல் பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் 20 பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தைப் பகிர்ந்து, ''இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்'' என்றும் பதிவிட்டிருந்தார்.
அவரது கருத்துக்குக் பரவலாக கடுமையான கண்டனங்கள் எழுந்தது. அத்துடன் #ShameonyouShalini உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.
இந்நிலையில் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'பெண் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகருக்கு இருந்த வக்கிரப் பார்வைக்குச் சற்றும் சளைத்ததல்ல மருத்துவர் ஷாலினியின் அபத்தப் பதிவு. தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய (மனநல) மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இப்பிரச்சினையை கொண்டு செல்வோம். இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக்கொள்ள முடியாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.