முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல்

​அரவக்குறிச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் இன்று (புதன்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளார். 
முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல்


அரவக்குறிச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் இன்று (புதன்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளார். 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன் ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே" என்று குறிப்பிட்டிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து தேசிய அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. 

இதையடுத்து, இந்து மதத்தினரை இழிவுபடுத்திப் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கே.வி. ராமகிருஷ்ணன் அரவக்குறிச்சி போலீஸில் செவ்வாய்கிழமை புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில், கமல்ஹாசன் மீது 153-ஏ (மதப் பிரச்னையை தூண்டும் விதத்தில் பேசுதல்), 295-ஏ (ஒரு மதம் குறித்து இழிவாகப் பேசுதல்) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, "விடுமுறை கால அமர்வில் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விசாரிக்க முடியாது. வேண்டுமென்றால் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம்" என்று தெரிவித்தது.

இதனால், கமல்ஹாசன் தரப்பில் இருந்து முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com