

ஹிந்து பயங்கரவாதி என்பது தான் சரித்திர உண்மை என்று திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட போது அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் மேலும் கூறியதாவது:
நான் யரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. ஆனால், அதை ஊடகம் தான் திரித்து வெளியிட்டது. அதற்கு முழுக் காரணமும் ஊடகம் தான். நான் அதை ஒரு தடவை தான் கூறினேன். ஊடகம் தான் பலமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியது.
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து என நான் கூறியது தான் சரித்திர உண்மை. உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும். தேர்தல் அரசியலில் சேர்ந்த பின், ஒரு இனம் மட்டும் போதுமா? மக்கள் அனைவருக்குமே நீதி கிடைக்க வேண்டும். அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன்.
யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். மதச் செருக்கு, சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது. நான் சொன்னது சரித்திர உண்மை.
இந்த அரசு வீழும், வீழ்த்தப்பட வேண்டும், வீழ்த்துவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.