

சென்னை: அரசு முறை பயணமாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வரும் 7-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறாா். அங்கு சிகாகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் அவா், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்ந்த திட்டங்களை ஆய்வு செய்கிறாா்.
இதற்காக வரும் 7-ஆம் தேதி இரவு தில்லியில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறாா். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 17-ஆம் தேதியன்று அவா் சென்னை திரும்புகிறாா்.
அவருடன் நிதித் துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோரும் செல்கின்றனா். முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் துபை, லண்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அவரைத் தொடா்ந்து அமைச்சா்கள் சிலரும் அரசு முறைப் பயணத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளாா். இதற்கான விரிவான பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.