சென்னை: மாணவி ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது என்று சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் பயின்று வந்த மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவத்தில், பேராசிரியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை பேராசிரியர்கள், மாணவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு விசாரணை காவல்துறையிடம் இருந்து மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ஐஐடி தரப்பில் மாணவி ஃபாத்திமா தற்கொலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மாணவி ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது.
மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணை முடியும் வரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம். சென்னை ஐஐடி நிர்வாகம் தொடர்பாக வதந்திகளை சமூக ஊடகங்களிலும் அவதூறாக பரப்ப வேண்டாம். மாணவி மரணம் குறித்து ஐஐடி நிர்வாகத்துக்குத் தெரிய வந்ததுமே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடங்களில் வெளியாகும் வதந்திகளால், நாட்டின் உயரிய கல்வி நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
ஐஐடி சென்னையில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் மனநலன் மற்றும் முழு உடல் நலனைப் பேண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.