துக்ளக் ஆட்சியை மிஞ்சுகிற வகையில் செயல்படும் அ.தி.மு.க. அரசு: அவசரச் சட்டம் தொடர்பாக அனல் கக்கும் அழகிரி

துக்ளக் ஆட்சியை மிஞ்சுகிற வகையில் அ.தி.மு.க. அரசு செயல்படுவதாக மறைமுகத் தேர்தல் அவசரச் சட்டம் தொடர்பாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையிலாகி விமர்சித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
Published on
Updated on
1 min read

சென்னை: துக்ளக் ஆட்சியை மிஞ்சுகிற வகையில் அ.தி.மு.க. அரசு செயல்படுவதாக மறைமுகத் தேர்தல் அவசரச் சட்டம் தொடர்பாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபர் 2016 இல் தமிழகத்தில் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு முறைகேடுகளின் காரணமாக தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளின் மீதான நீதிமன்ற வழக்குகளின் காரணமாக டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவனையை அறிவிக்க வேண்டுமென்று மாநில தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. 2016 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டு மறைமுக தேர்தல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 11 அன்று சட்டப் பேரவையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, நேரடி தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. அப்போது சட்டப் பேரவையில் உரையாற்றிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தற்போது நடைமுறையில் உள்ள மறைமுக தேர்தலினால் பெரும்பாலான மேயர்கள், கவுன்சிலர்களின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்கான வார்டு வளர்ச்சி திட்டங்களைத் தான் நிறைவேற்றுகிற சூழல் இருப்பதாக குறிப்பிட்டு, நியாயப்படுத்தி பேசினார். தற்போது அந்த நியாயம் காற்றில் பறந்தது ஏன் ? பொதுவாக துக்ளக் ஆட்சியை மிஞ்சுகிற வகையில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய தடுமாற்றங்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம் ? அ.தி.மு.க. ஆட்சியை ஒரு மக்கள் விரோத ஆட்சியாகவே கருதுவதால் மக்களை நேரிடையாக சந்திக்க தயக்கம் இருக்கிறது. இதுவே இந்த முடிவிற்கு காரணமாகும்.

சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மக்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெற்ற அ.தி.மு.க.வினர் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் மூலமாக கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி, பதவிகளை கைப்பற்றி விடலாம் என்கிற முயற்சியை முறியடிக்க வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இருக்கிறது. அ.தி.மு.க.வின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எல்லாவற்றையும் மீறி அவசரச் சட்டம் கொண்டு வரப்படுமேயானால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி நேரடித் தேர்தல் நடத்தாமல் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது. கொடுத்த வாக்குறுதியை மீறுவது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கிற செயலாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com