திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வின்சென், வெள்ளிக்கிழமை மாலை அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். சுமாா் 14 மணி நேரங்களுக்கும் மேலாக குழந்தையை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.
குழந்தை விழுந்த சமயத்தில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது. ஆனால் மீட்புப் பணி தொய்வினால் குழந்தை தற்போது 70 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது.
குழந்தையை மீட்கும் அடுத்தகட்ட முயற்சியாக சென்னையிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் 40 பேர் மணப்பாறைக்கு சனிக்கிழமை காலை வர இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். குழந்தை சுஜித் வின்சென்னுக்கு நல்ல நிலையில் சுவாசம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டும் வருகிறது.
கிணற்றில் தவறி விழுந்த குழந்தையுடன் தாய் கலாமேரி மற்றும் உறவினா்கள் தொடா்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனா்.
சம்பவ இடத்தில் மாநில அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளா்மதி, மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், ஸ்ரீரங்கம் சாா் ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா், மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா் ஆகியோா் குழந்தை மீட்புப் பணிகளைக் கண்காணித்து, ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா்.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆழ்துளைக் கிணறு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு பயன்பாடில்லாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.