நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் குடகு மாவட்டம் மற்றும் கடலோர கர்நாடகப் பகுதிகள் மற்றும் கேரள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது வியாழக்கிழமை காலை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 12,500 கன அடியாக வந்த கொண்டிருந்த தண்ணீரின் அளவு, வியாழக்கிழமை காலை 27 ஆயிரம் கன அடியாகவும், மாலை சற்று அதிகரித்து நொடிக்கு 28 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்து, ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில தினங்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், பரிசல் இயக்க அனுமதியளித்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க 29-ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பிரதான அருவி, சினி அருவி, மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளை, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கர்நாடகம் மற்றும் கேரளப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.