சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வரும் அமித்ஷாவின் பதுங்கு திட்டம்: கே.எஸ்.அழகிரி விளாசல் 

சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வரும் வகையிலான அமித்ஷாவின் பதுங்கு திட்டம் என்று  கே.எஸ்.அழகிரி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வரும் வகையிலான அமித்ஷாவின் பதுங்கு திட்டம் என்று  கே.எஸ்.அழகிரி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சமீபகாலமாக இந்திய மக்களின் ஒற்றுமைக்கு உலை வைக்கிற வகையில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசி வருகிறார். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி மட்டுமே என்று பேசி இந்தி பேசாத மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். அவரது நோக்கம் நிறைவேறுகிறதோ, இல்லையோ, இந்தி பேசும் மக்களை மொழியின் அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்ட முயற்சிக்கிறார். கடந்த 70 ஆண்டு அனுபவத்தில் பல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டது, இதனால் நாட்டுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்று உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற கருத்தை அமித்ஷா கூறியிருக்கிறார். இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு, ஹிட்லர், முசோலினி பாதையில் சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வருகிற நோக்கத்தில் அவரது பதுங்கு திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதைவிட இந்தியாவுக்கு பேரழிவு வேறு எதுவும் இருக்க முடியாது.

பல கட்சி ஆட்சி முறை தோற்று விட்டதாக அமித்ஷா மேலும் கூறுகிறார். இதற்கு என்ன அடிப்படை என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை. கடந்த 2004 முதல் 2014 வரை நடைபெற்ற பல கட்சிகள் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகளை மூடிமறைத்து அமித்ஷா பேசியிருக்கிறார். அன்று நடைபெற்ற பல கட்சிகள் அடங்கிய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தான் சுதந்திர இந்தியா காணாத வகையில் 2005 முதல் மூன்று ஆண்டுகள் 9 சதவீதத்திற்கு மேலாக தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது.

இந்தியாவின் பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டுக்குள் ரூபாய் 350 லட்சம் கோடியாக உயர்த்தப் போவதாக அமித்ஷா கூறுகிறார். இந்தளவுக்கு நம்பிக்கையோடு இருக்கிற அமித்ஷா ரிசர்வ் வங்கியிடம் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியுதவியை ஏன் பெற்றார் என்பதை விளக்க வேண்டும்.

எனவே, அனைத்து துறைகளிலும் தோல்வி ஏற்பட்டு பொருளாதார மந்தநிலை காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை எதிர்கொண்டிருக்கிற போது, மதம், மொழி பிரச்சினைகளை எழுப்பி, மக்களின் கவனத்தை திசைத்திருப்புகிற முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டிருக்கிறார். இவரது முயற்சியை முறியடிக்கிற வகையில் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் கடுமையான பிரச்சாரத்தின் மூலம் மக்களிடையே வகுப்புவாத சக்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் என தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com