நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு: சிபிசிஐடி.க்கு மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடு செய்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி.க்கு மாற்றி டிஜிபி ஜே.கே.திரிபாதி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு: சிபிசிஐடி.க்கு மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு
Published on
Updated on
1 min read


நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடு செய்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி.க்கு மாற்றி டிஜிபி ஜே.கே.திரிபாதி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வருகிறார். 
இந்நிலையில் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலமாகப் புகார் வந்தது.
 அந்தப் புகாரின் அடிப்படையில் கல்லூரி பேராசிரியர்கள், உதித் சூர்யாவிடம் விசாரணை செய்தனர்.  இதில் உதித் சூர்யா, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து உதித் சூர்யாவின்  நீட் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, அதில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்துக்கும், உதித் சூர்யாவுக்கும்  வித்தியாசம் இருந்தது  தெரியவந்தது. 
இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி மாவட்ட காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மீதும், அவருக்காக தேர்வு எழுதிய நபர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
 விசாரணையில், உதித் சூர்யா ஏற்கெனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததால், மூன்றாவது முறையும் தோல்வியடைந்துவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது என்பதால், உதித் சூர்யாவும், அவரது பெற்றோரும் இணைந்து ஏற்கெனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு நபரை ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்திருப்பதும், முறைகேட்டில் சிக்காமல் இருப்பதற்கு மும்பையில் தேர்வு எழுதியிருப்பதும் தெரியவந்தது.
சிபிசிஐடி.க்கு மாற்றம்: இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல்துறையின் தனிப்படையினர் கடந்த வாரம் சென்னையில் உதித் சூர்யா குறித்தும், அவரது பெற்றோர் குறித்தும் விசாரணை செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் உதித் சூர்யாவையும், அவரது பெற்றோரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் இவ் வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடி.க்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, இவ் வழக்குக்குரிய ஆவணங்களைத்  தேனி மாவட்ட போலீஸார் உடனடியாக சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார், இவ் வழக்கு குறித்து விரைந்து விசாரணையைத் தொடங்க உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com