சென்னை: விக்ரவாண்டி தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக நா. புகழேந்தி போட்டியிடுவார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இன்று நேர்காணல்: திமுக வேட்பாளர் நேர்காணல் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கான வேட்பாளரை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இது குறித்து கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக நா. புகழேந்தி போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக இருப்பவர் நா. புகழேந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிட உள்ளது. இதற்காக அறிவாலயத்தில் திங்கள்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மு.க.ஸ்டாலினின் மகனும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டியில் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி விருப்ப மனு அளித்திருந்தது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, மாவட்ட இலக்கிய அணித் தலைவர் ராஜாராமன், விழுப்புரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெயரவிதுரை உள்பட ஏராளமானோர் மனு அளித்திருந்த நிலையில், நா. புகழேந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.