சென்னை: பதாகை விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பொது இடத்தில் அனுமதியின்றி பதாகை வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது
அவரது செல்போன் டிஜிட்டல் பணபரிமாற்றம் ஆகியவற்றை போலீசார் கண்காணித்தனர். நேற்று அவர் திருச்சி, தர்மபுரி, ஒகேனக்கல் பகுதிகளுக்கு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து 2 தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் உள்ள இஸ்லாம்பூர் என்ற இடத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஜெயகோபால் தங்கி இருப்பது போலீஸ் கண்காணிப்பில் உறுதியானது.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று விடுதியை சுற்றிவளைத்து ஜெயகோபாலை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் 16 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
பதாகை விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்தது தொடர்பாக பதாகை கட்டியவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வந்தனர். அந்த பகுதியை சேர்ந்த பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோர்தான் சாலையில் பதாகை கட்டினார்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பதாகை கட்டிய 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இன்று ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஜெயகோபால் ஆஜர்படுத்தப்பட்டார். விதிமுறைகளை மீறி பேனர் வைத்தது தவறுதான் என நீதிபதி முன் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் ஜெயகோபால். அக்டோபர் 11ம் தேதி வரை ஜெயகோபாலை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.