விளக்கத்திற்குப் பதிலாக, மக்களை மோதவிடுவதே குறி: பாஜக மீது பாயும் இந்திய.கம்யூனிஸ்ட் 

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன் என விளக்கம் தருவதற்குப் பதிலாக, இந்திய மக்களை மதரீதியாக, சாதிரீதியாகப் பிரித்து மோதவிடுவதிலையே குறியாக இருக்கிறார்கள்.என்று பாஜக மீது இந்திய.கம்யூனிஸ்ட்....
விளக்கத்திற்குப் பதிலாக, மக்களை மோதவிடுவதே குறி: பாஜக மீது பாயும் இந்திய.கம்யூனிஸ்ட் 

சென்னை: தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன் என விளக்கம் தருவதற்குப் பதிலாக, இந்திய மக்களை மதரீதியாக, சாதிரீதியாகப் பிரித்து மோதவிடுவதிலையே குறியாக இருக்கிறார்கள்.என்று பாஜக மீது இந்திய.கம்யூனிஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய.கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  புதனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற மத்திய பாஜக ஆட்சி, சென்ற தேர்தலின் போது தந்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.

கறுப்பு பணத்தை ஒழிப்போம்,  ஒவ்வொரு வெளிநாடுகளிலிருந்தும் இந்தியப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவோம், ஆளுக்கு 15 லட்சம் வங்கி கணக்கில் போடுவோம்,  விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை தருவோம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்பதெல்லாம் அவர்கள் தந்த வாக்குறுதிகளாகும்.

ஆனால் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக்கி, நம்மிடமிருந்து பணத்தை பறித்தார்கள். நெறிமுறையற்ற ஜிஎஸ்டி வரி போட்டு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மூடவைத்தார்கள். அதனால் 6 கோடிபேர், செய்து கொண்டிருந்த வேலையை இழந்தார்கள். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவே இல்லை.  விவசாயிகள் கடன்துயரம் தாங்காமல் 60 ஆயிரம் பேர் இந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டார்கள். 'நீட்' தேர்வை திணித்து சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குள் கால்வைக்க முடியாமல் தடுத்தார்கள்.

அதே சமயத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தார்   என்று சொல்லி கும்பல் கூடி அடித்தே கொல்வதுது, காஷ்மீரில் கோவிலுக்குள்ளேயே வைத்து பலநாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி ஆஷிபா என்ற சிறுமியை கொன்ற கொடியவர்களை கைது செய்ய விடாமல் தடுத்தது,  முஸ்லீம்கள் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்குவது, எதிராக கருத்து சொல்லும் எழுத்தாளர்கள் போராசிரியர்களை சுட்டுக் கொல்வது, கொன்றவர்களைக் கைது செய்யாமல் விட்டு விடுவது, மாற்றுக் கருத்தை எழுதினால் நகர்புற நக்சலைட்டுகள் என்று கைது செய்து சிறைவைப்பது, தேசவிரோத வழக்கு போடுவது என நாட்டையே பிஜேபிஅரசுஅச்சுறுத்திவைத்திருக்கிறது.

அது கூட்டணி அமைப்பதற்குக் கூட, மடியில் கனமிருந்த அஇஅதிமுக அமைச்சர்களை ‘ரைடு’ செய்து பணியவைத்ததை நாடறியும்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன் என விளக்கம் தருவதற்குப் பதிலாக, இந்திய மக்களை மதரீதியாக, சாதிரீதியாகப் பிரித்து மோதவிடுவதிலையே குறியாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் காவிரி நீர், மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள், ஸ்டெர்லைட், சேலம் எட்டு வழிச் சாலை, இந்தித் திணிப்பு என எண்ணற்ற பிரச்சினைகளில்  தமிகத்தின் நலனுக்கு எதிரான முடிவுகளையே மோடி அரசு எடுத்தது. அதன் தயவில் பிழைத்திருக்கும் அஇஅதிமுக அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது.

மோடி ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சாசனம் ஆகியவையே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com