

"டிக் டாக்' செயலி தடை உத்தரவில் மாற்றம் இல்லை எனவும், இந்தச் செயலியை தடை செய்வது தொடர்பாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் தாக்கல் செய்த மனு: நாடு முழுவதும் பிரபலமாகி உள்ள "டிக் டாக்' செயலியை இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் "டிக் டாக்' செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், "டிக் டாக்' செயலியை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி "டிக் டாக்' செயலியை தடைசெய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "டிக் டாக்" செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், "டிக் டாக்' விடியோவை தொலைக்காட்சிகளில் வெளியிட தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது "டிக் டாக்' நிறுவனம் தரப்பில், "டிக் டாக்' செயலியால் எந்த விதமான தவறும் நடக்கவில்லை.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக "டிக் டாக்' செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே "டிக் டாக்' செயலிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் "டிக் டாக்' செயலியைத் தடை செய்த உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது என்றனர். இதையடுத்து "டிக் டாக்' செயலியை தடை செய்வது தொடர்பாக "டிக் டாக்' நிறுவனம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியன வரும் 24 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.