இயல்பான பணிகளுக்கு தடையில்லை: அரசுத் துறைகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு போன்ற இயல்பான பணிகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்று அரசுத் துறைகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு போன்ற இயல்பான பணிகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்று அரசுத் துறைகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சேர்க்கை அறிவிப்புகளை வழக்கம் போல் வெளியிடலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 18-ஆம் தேதி நிறைவடைந்தாலும் வாக்கு எண்ணிக்கை மே 23-இல் நடைபெறுகிறது. இதனால், ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு மாத காலத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன. 
சேர்க்கை அறிவிப்புகள்: தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தும் காலத்தில் புதிய அறிவிப்புகளையோ, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகளையோ கோரக் கூடாது. இந்த நிலையில், தற்போது கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான காலம் என்பதால் அதுதொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாமா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்தன. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
புதிய அறிவிப்புகள், அதுதொடர்பான உத்தரவுகளை வெளியிட மட்டுமே தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி தேவை. ஆணையம் அனுமதித்தால் மட்டுமே அதனை வெளியிட முடியும். ஏப்ரல், மே மாதங்கள் உயர்கல்வி, பள்ளிக் கல்விக்கான காலமாகும். எனவே, அந்தத் துறைகளின் சார்பில் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. இதற்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதுபோன்ற இயல்பான பணிகளை மேற்கொள்வதில் தேர்தல் ஆணையம் எந்தத் தடையும் விதிப்பதில்லை எனக் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com