
தமிழகத்தில் பொது இடங்களில் சுகாதாரமான இலவச கழிவறைகள் அமைக்கக்கோரிய வழக்கில், புதுதில்லியில் உள்ள நடைமுறையை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கரூரைச் சேர்ந்த சரவணன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பொதுக் கழிவறைகள் சுத்தமாக இருப்பதில்லை. மேலும் அங்கு நபர் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சிக்கு சொந்தமான கழிவறைகள், குறைந்த ஒப்பந்தத் தொகைக்கு ஏலம் விடப்பட்டும், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே தமிழகம் முழுவதும் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கழிவறை ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் புதுதில்லி உள்ளிட்ட நகரங்களில் உயர் தரத்துடன் இலவச கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதுபோல தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதாரமான இலவச கழிவறை வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் புதுதில்லியில் உள்ள பொதுக்கழிவறைகள் சுத்தமாக உள்ளன. அங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. கழிவறை சுவர்களில் தனியார் நிறுவன விளம்பரங்களை காட்சிப்படுத்துவதால், கிடைக்கும் வருவாயை கட்டணமில்லா கழிவறை மேம்பாட்டிற்காக பயன்படுத்துகின்றனர்.
எனவே, புதுதில்லியில் உள்ள நடைமுறையை, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து, புதுதில்லி சென்று ஆய்வு செய்து, தமிழகத்திலும் அதை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.