
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவர்கள் வியாழக்கிழமை ஆஜராகவில்லை.
ஆணையம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தங்கள் மருத்துவர்கள் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் மருத்துவக் குழு அமைத்தால் மட்டுமே தங்கள் மருத்துவர்கள் ஆஜராவார்கள் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரித்ததுடன், ஆணையத்தின் விசாரணைக்கும் தடை விதிக்க மறுத்து விட்டது.
இதை எதிர்த்து, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 26) நடைபெற உள்ள நிலையில், வியாழக்கிழமை (ஏப். 25) ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி இருந்தது.
ஆஜராகவில்லை: ஆனால், விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வியாழக்கிழமை ஆஜராகவில்லை. மேலும், ஆணையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் தங்கள் மருத்துவர்கள் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.