

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நீர்நிலைகளை தூர்வாருவதற்கு தேவையான இயந்திரங்களை வாங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் முறையாக தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் உள்ளது. கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு இருப்பதால் தண்ணீர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு காலதாமதமாகிறது. இதனால் சரியான நேரத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அணைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இதேபோல அனைத்து நீர்நிலைகளும் பராமரிக்கப்படாமல் இருந்தால் 2020-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்களை உள்ளிட்ட நீர்நிலைகளை துறை சார்ந்த அதிகாரிகள் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நீர்நிலைகளை தூர்வாருவதற்கென இயந்திரங்களை வாங்கியது போல, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்கு தேவையான இயந்திரங்களை வாங்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.