மைசூரு: வெள்ளி மாலை நிலவரப்படி கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,50,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் வடக்கு பகுதியில் பெலகாவி, பாகல்கோட்டை மற்றும் யாத்கிரி மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அருகில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மகாராஷ்டிராவின் தென் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக கோதாவரி உள்ளிட்ட ஆறுகளில் பெருகும் நீரும் கர்நாடகாவுக்கு வருவதால் கர்நாடகாவில் உள்ள ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.
வெள்ளி மாலை நிலவரப்பபடி கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையின் துணை அணையான தாரகா அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கிருஷ்ணா ராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கபப்டுகிறது.
எனவே மொத்தமாக கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,50, 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் வியாழனன்று தமிழகத்திற்கு 1,02,421 கன அடி நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.