காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் தரிசனம் வரும் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை முதல் தேதியிலிருந்து தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 38 நாள்களாக சுமார் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
வரும் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். தொடர்ந்து, 17-ஆம் தேதி அத்திவரதரை அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆகம விதிகளின்படி வைக்க இருப்பதால், அன்றைய தினம் முழுவதும் அத்திவரதர் தரிசனம் கிடையாது.
எனவே 16-ஆம் தேதி மாலை 4 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறும்.
ஆக.16,17 ஆகிய இரு தேதிகளிலும் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் கிடையாது. அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் நள்ளிரவு வரை அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஒருநாளைக்கு சுமார் 21 மணி நேரம் வரை அத்திவரதர் தரிசனத்தைக் காண பக்தர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,200 சுகாதாரப் பணியாளர்கள் நகரைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது கூடுதலாக 500 பேர் சேர்க்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இன்னும் தேவைப்பட்டால் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும்.
பக்தர்களின் வசதிக்காக மேலும் 25 சிற்றுந்துகள் இயக்கப்படும். இம்மாதம் 13, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வரிசையில் 10 ஆயிரம் பேர் வீதம் நிறுத்தி,நிறுத்தி தரிசனம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் தங்கும் வகையில் அடிப்படை வசதிகளோடு கூடிய கூடாரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சுந்தரமூர்த்தி உடனிருந்தார்.