சாகும்வரை மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்: முடிவுக்கு கொண்டுவர அன்புமணி கோரிக்கை 

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐந்து மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாகும்வரை மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்: முடிவுக்கு கொண்டுவர அன்புமணி கோரிக்கை 

சென்னை: சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐந்து மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஊதிய உயர்வு, மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 5 அரசு மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். நான்காவது நாளாக அவர்களின் போராட்டம் நீடிக்கும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வர  நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

இந்திய மருத்துவக் குழுவின் ஆணைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை 4டி-2 என்ற எண் அரசாணையின் மூலம் குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும்; பட்ட மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் ஆகியவை தான் சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கையாகும்.

அரசு மருத்துவர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் இப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் இப்போராட்டத்திற்கு  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான்காவது நாளாக இன்றும் உண்ணாநிலை போராட்டம் நீடிப்பதால், மருத்துவர்களின் உடல்நிலை நலிவடைந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

தமிழக அரசு மருத்துவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதம் 10, 11 ஆகிய தேதிகளில், மக்களுக்கான மருத்துவ சேவை பாதிக்காத வகையில் மண்டல அளவில் அடையாள உண்ணாநிலை, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை  அரசு மருத்துவர்கள் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து இப்போது மருத்துவர்களின் சாகும்வரை  உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக நாளை (27.08.2019) செவ்வாய்க் கிழமை அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளவும் அரசு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வது நோயாளிகளை கடுமையாக பாதிக்கும். எனவே, மருத்துவர்களின் சாகும்வரை உண்ணாநிலையை முடிவுக்கு கொண்டு வரவும், நாளைய வேலைநிறுத்தத்தை தவிர்க்கும் வகையிலும் அரசு மருத்துவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com