முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி லண்டன் விமான நிலையத்தில் இறங்கிய போது, அங்கு நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாள்கள் பயணமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை (ஆகஸ்ட் 28) காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து ஏமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்றார். இதன்பின் அங்கிருந்து அவர் லண்டன் சென்றார்.
இந்தப் பயணத்தில் முதல்வருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோர் செல்கின்றனர்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குச் செல்வதாகவும், அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று லண்டன் சென்ற முதல்வருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆனால், முதல்வர் வந்த அதே நேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்தியாவின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகவும், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
இதன் காரணமாக முதல்வரும், அமைச்சர்களும் மாற்று வழியில் சென்றதாகக் கூறப்படுகிறது.